கிரிக்கெட் வீரர்களைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டும் – ஹரீன்

unnamed 4

“தமது இயலாமையை மறைப்பதற்காகவும் நாட்டுப் பிரச்சினையை மறைப்பதற்காகவும்  இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் அரசியல் செய்ய வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் கிரிக்கெட்டை அரசியலாக்க முயற்சிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக  கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட முன்வரவேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைக்கு சிறந்த நற்பெயரைப் பெற்றுத்தந்த விளையாட்டு வீரர்களைப் பழிவாங்க மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக நாங்கள் கவலையடைகின்றோம். 2011இல் இடம்பெற்ற சம்பவம் ஏன் திடீரென வெளிப்பட்டது. குறுகிய நோக்கத்துக்காக விளையாட்டு வீரர்களுடன் அரசியல் செய்யவேண்டாம் என அரசிடம் கேட்கின்றோம். தங்களின் இயலாமை மற்றும் நாட்டுப் பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கு விளையாட்டை அரசியலாக்க முயற்சிக்கும் நடவடிக்கைக்கு எதிராக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

அத்துடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹோமாக விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக மக்களின் எதிர்ப்பு வெளியானது. கொராேனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் தற்போதைக்கு இது பொருத்தமில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, மஹேல, சங்கக்கார, அரவிந்த போன்ற திறமையான வீரர்கள் இந்த மைதானம் அமைப்பதற்கான தங்களின் எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளியிட்டிருந்தனர்.

அரசியல் பழிவாங்கல்களின் உச்ச நிலையில் இருக்கும் குழுவொன்றே இன்று நாட்டை நிர்வகிக்கின்றது என்பதை இந்தச் சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ளலாம். தேர்தல் காலத்தில் இந்த வீரர்களுக்கு எதிராகச் செயற்படுவது அரசுக்கு நன்மையாக அமைந்துவிடும் என மஹிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் நினைத்தார்கள். ஆனால், அது இன்று அரசுக்கே தடையாக மாறி இருக்கின்றது.

மஹேல, சங்கக்கார போன்றவர்கள் எமது நாட்டுக்குப் பெற்றுத்தந்த நற்பெயர் விலை மதிக்க முடியாது. யாராவது ஒரு நபர் உண்மையான நோக்கத்தில் செயற்பட்டால், அந்த நபரை இல்லாமலாக்குவது எமது நாட்டின் கலாசாரமாகி இருக்கின்றது. அதனால் வீரர்கள் மீது கை வைக்கவேண்டாம். அவர்களுடன் அரசியல் செய்யவேண்டாம் என அரசைக் கேட்கின்றோம். இந்த நிலைமை தொடர்ந்தால் பாரிய பிரச்சினைக்கு நாங்கள் முகம்கொடுக்க நேரிடும். வீரர்கள் விளையாட அச்சப்படுவார்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை விளையாட விடமாட்டார்கள்.

அத்துடன் எமது ஆட்சிக்  காலத்தில் நாங்கள் ஊழல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அங்கீகரித்திருக்கின்றோம். அதனால் பொய்க் குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்காமல் நாட்டின் சட்டத்தைச் செயற்படுத்துமாறு கேட்கின்றோம். ஊழல், மோசடிக்காரர்களை நாங்கள் விளையாட்டுத்துறையில் இருந்து நீக்கினோம்.

குமார் சங்கக்கார உலக கிரிக்கெட் சபை தலைமைத்துவத்துக்குப் போட்டியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு மறுபக்கத்தில் போட்டியிடுபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, எமது முன்னாள் அமைச்சர் ஒருவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாரோ என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது. தேர்தல் ஒன்று இடம்பெற இருக்கும் நிலையில் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என நாங்கள் அரசைக் கேட்கின்றோம்.

எனவே, அரசியல் பேதங்களை மறந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு எதிராக போராட முன்வரவேண்டும். வீரர்களைப் பாதுகாக்க முன்வருமாறு நாமல் ராஜபக்ச உட்பட அதன் குழுவினருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” – என்றார்.