“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்று சரித்திரம் படைக்கும். இந்த நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
எனவே, இந்த நம்பிக்கையை எமது மக்கள் வீணடிக்கக்கூடாது. அனைவரும் தவறாது வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும்; ‘வீடு’ சின்னத்துக்குப் புள்ளடி இட வேண்டும்.”
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று மக்களுடன் நடத்திய சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் உரிமைக்கான எமது குரல்கள் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இம்முறை பொதுத்தேர்தலிலும் எமது குரல்களுக்கு எமது மக்கள் மேலும் வலுச் சேர்க்க வேண்டும். கடந்த தடவையைவிட இம்முறை கூட்டமைப்பின் சார்பில் அதிக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்குத் தமிழ் மக்கள் அனுப்பிவைக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை எமது மக்கள் தவறாது செய்வார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
தமிழரின் பூர்வீக பிரதேசமான வடக்கு, கிழக்கின் வரலாற்றை மாற்றியமைக்கும் மறைமுகத் திட்டங்களைத் தென்னிலங்கை வகுத்து வருகின்றது.
இதை நாம் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். இதைப் பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும்” – என கூரியுள்ளார்.
.