தமிழ்க் கட்சிகளுடன் பல்கலைக்கழக மாணவர்களின் ஐந்தாவது சந்திப்பு- சற்று முன் ஆரம்பம்!

01 1 4
01 1 4

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் யாழ். பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோரும்,

புளொட் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும்,

ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும்,

ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொது அமைப்புகளின் சார்பில் கிருஸ்தவ மதகுரு ஒருவரும், சின்மிய மிசன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா சுவாமிகளும், யாழ். பல்கலைக்கழக அரசறிவியற்றுறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் அ. ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.