இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் ; ஒரேநாளில் 300 தொற்றாளர்கள்

02 7

இலங்கையில், நேற்று வெள்ளிக்கழமை மாத்திரம் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 283 பேருக்கும், இந்தியாவிலிருந்து வருகைதந்த 09 பேருக்கும், ஐ.அரபு ராஜ்ஜியத்திலிருந்து வருகைதந்த 03 பேருக்கும், பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் ஒருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இறுதியாக மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த மூன்று பேரும் கந்தகாடு மத்திய நிலையத்தில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2454 ஆக உயர்ந்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இதுவரை 342 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,980 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 463 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 37 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.