24 மணித்தியாலயத்திற்குள் 2025 பேர் கைது

Thiththikfkum isaffgi copy 1 620x330 1

திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

இதற்கமைய சனிக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது , சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும் , பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய 2025 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 414 சந்தேக நபர்களுள் 235 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 324 கிராம் 500 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளுடன் 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து ஒரு கிலோ 237 கிராம் 317 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடன் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரிடமிருந்து 76 கிராம் 385 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 4848 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 7 ரிபீடர் ரக துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 410 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 838 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.