முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு அழைப்பாணை!

Hemasiri
Hemasiri

தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) காலை 8.30-க்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஹேமசிறி பெர்னாண்டோ மக்கள் வங்கியின் தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில், வங்கியை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்றிட்டத்திற்காக கணினி மென்பொருளை கொள்வனவு செய்தபோது நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் ஊழியர்கள் சங்கத்தினால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹேமசிறி பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் , ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளூடாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் குறித்த அறிவித்தல் இன்று கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டார்.