சட்ட விரோதமான முறையில் அரச காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தியது மன்னார் தேர்தல் முறைப்பாட்டுக் குழு

DSC 4264
DSC 4264

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராச மடுக் கிராமத்தில் தனியார் ஒருவரால் அரச காணி , கோவில் காணி  , இந்தியாவில் உள்ள பொது மக்களின் காணிகள் என சுமார் 49 ஏக்கர் காணிகளை துப்பரவு செய்து வேலியிடும் நடவடிக்கையில்  நேற்று முன் தினத்திலிருந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நானாட்டான் சிறி செல்வ முத்து மாரியம்மன்  ஆலய நிர்வாகத்தினரும் , பொது மக்களும் இணைந்து  மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்தனர்.
 குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் உதவித்தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் அவர்களின் பணிப்பில் மன்னார் தேர்தல் முறைப்பாட்டுக்குழு அதிகாரி  ஏ.டி.பி.றொகான் தலைமையிலான குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை(14)  பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன் போது தேர்தல் காலத்தில் முரண்பாடுகளை தவிர்துக் கொள்வதற்காக அரச , பொதுமக்கள் , கோவில் காணிகளை வேலியிடும் செயற்பாடுகளுக்கு தடைவிதித்தனர். 
இதன் போது கருத்து தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர்,
நானாட்டான் இராச மடுப்பகுதியில் தற்போது அபகரிக்கப்படும் காணியானது 2017ஆம் ஆண்டு   தேசிய காணி ஆணையாளரால்  அரச காணி என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாகும்.
குறித்த காணிகளில் 50 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன் சிலர் இந்தியாவிலும் உள்ளார்கள்.அத்துடன்  இந்து ஆலயமும் உள்ளது.  குறித்த நபர் நானாட்டான் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன்  பொது மக்களின் காணிகளையும் அரச மற்றும் கோவில் காணிகளை வேலியிடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

DSC 4266
DSC 4266

இதற்கு பிரதேச செயலாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் இந்த காணியின் ஆவணங்களை சேகரித்த போது குறித்த  காணிகளை அபகரிப்புச் செய்யும் நபர் 1964ஆம் ஆண்டு 10 வருட ஒப்பந்த அடிப்படையில்  49 ஏக்கர் காணிகளை அரசிடம் பெற்றுள்ளார்.  அப்படி பெறப்பட்ட முதல் 10 வருடங்களுக்கு மட்டுமே குத்தகை செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் குத்தகை செலுத்தப்படாமலும் காணி பராமரிக்கப்படாமலும் இருந்ததினால் தேசிய காணி ஆணையாளரால் 2017ஆம் ஆண்டு  குறித்த காணி அரச காணி என்று நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

DSC 4265
DSC 4265

இதை அப்போதைய நானாட்டான் பிரதேச செயலாளராக இருந்த எஸ். பரமதாசன் மற்றும் காணி அதிகாரி செந்தூரன் ஆகியோர்  உறுதிப் படுதியுள்ளனர். 
அதற்கான பிரதிகள்  எம்மிடம் உள்ளது.  ஒரு விடயத்தை ஆராய்ந்து விசாரணை செய்யாமல்  நானாட்டான் பிரதேச செயலாளர் செயற்படுவது தமக்கு கவலையளிப்பதாக பாதிக்கப்பட்ட ஆலய நிர்வாகத்தினரும் பொது மக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக அந்த காணியில் குடியிருந்து பராமரித்து வரும் பொது மக்களுக்கு  உரிய காணியை பெற்றுத் தருவதற்கு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.