ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சமான எதிர்காலம்” கொள்கை திட்டத்தை புதிய அரசாங்கத்தில் செயற்படுத்தவுள்ளதால் பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலுக்கான கொள்கை பிரகடனத்தை வெளியிடவில்லை. துறைசார் நிபுணர்கள் ஊடாகவே சுபீட்சமான எதிர்காலம் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
துறைசார் நிபணர்களினால் உருவாக்கப்பட்ட சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை புதிய அரசாங்கத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். ஜனாதிபதியின் கொள்கை திட்டங்களை ஏற்றுக் கொண்டு 69 இலட்ச மக்கள் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள். அவரது கொள்கை திட்டங்களை முழுமையாக செயற்படுத்த இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவது அவசியமாகும்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொதுஜன பெரமுன வெளியிட்ட சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டம் மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே இம்முறை பொதுத்தேர்தலுக்கான கொள்ளை பிரகடனத்தை வெளியிடவில்லை. வகுக்கப்படும் கொள்கைகள் உறுதியாக இருந்தால் மாத்திரமே அரச நிர்வாகத்தை முறையாக முன்னெடுத்து செல்ல முடியும். அடிக்கடி கொள்கைத்திட்டங்கள் மாற்றமடையும் போது அது அரசாங்கத்தின் பலவீனத்தை உணர்த்தும்.
வீழ்ச்சியடைந்துள்ள துறைகளை மீள கட்டியெழுப்பும் வழிமுறைகளை அரசியலுக்கு அப்பாற் சென்று துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய வகுத்துள்ளோம். அனைத்து திட்டங்களும் தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக உள்ளது. புதிய அரசாங்கத்தில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொதுதேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிப் பெறும். அவ்வெற்றி சாதாரண வெற்றியாக அமைய கூடாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். ஜனாதிபதியும், அரசாங்கமும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும். இல்லாவிடின் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும் தோற்றம் பெறும் என்றார்.