எனது ஒளிப்படத்தை பயன்படுத்த வேண்டாம்; ரஞ்சித் ஆண்டகை வேட்பாளர்களிடம் கோரிக்கை

Malcam Ranjith
Malcam Ranjith

எனது ஒளிப்படங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென கொழும்பு பேராயார் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள், மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் ஒளிப்படங்களை துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த செயற்பாட்டுக்கு ரஞ்சித் ஆண்டகை எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விளம்பரங்களில் எனது அனுமதியின்றி என்னுடைய  ஒளிப்படங்களை பயன்படுத்துகிறார்கள்.

அதாவது சில வேட்பாளர்கள், என்னுடன் எடுக்கப்பட்ட பழைய  ஒளிப்படங்களை, தங்கள் பிரசாரப் பொருட்களுக்காகப் பயன்படுத்துவதை நான் கவனித்தேன்.

எனவே, பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனது அனுமதியின்றி என்னுடைய  ஒளிப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதேவேளை கத்தோலிக்க திருச்சபை, எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் அல்லது  எந்தவொரு  வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.