சுற்றிவளைப்புகளில் 1,630 பேர் கைதாகினர்!

images 1 4
images 1 4

ஞாயிற்றுக்கிழமை (19) நள்ளிரவு 12 மணி முதல், திங்கட்கிழமை (20)  நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,630 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 309 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுகளில் 641 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 238 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 140 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 02 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 278 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளின்போது ரிபீட்டர் வகை துப்பாக்கி 01, நாட்டுத் துப்பாக்கிகள் 03, கத்திகள் 02, தோட்டாக்கள் 123 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின்போது கைக்குண்டுகள் 02, டெட்டனேட்டர்கள் 05 ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

7 ஆயிரத்து 659 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றபட்டுள்ளது. அத்தோடு, ஹெரோயின், கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.