எதிர்காலத்தினைக் காப்பதற்கு நிகழ்காலத்தில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்

IMG 20191111 WA0000
IMG 20191111 WA0000

எதிர்காலத்தினைக் காப்பதற்கு நிகழ்காலத்தில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில், “எதிர்வரும் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றிலிருந்து 12 நாட்களே உள்ளன. இந்த 12 நாட்களே எம் எதிர்காலத்தினை தீர்மானிக்கவுள்ளன.

இந்த தீர்க்கமான காலகட்டத்தில் நாம் அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இந்த விடயத்தினை தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு பலப்படுத்துவதன் ஊடாகவே எங்களது எதிர்கால இருப்பினைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எமது மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி வந்திருக்கின்றார்கள். நாம் தற்போது நாட்டிலுள்ள அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்றபோது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான பயணத்தை முன்னெடுப்பதற்கு மக்கள் மீண்டும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அதிகளவான உறுப்பினர்களின் பலத்துடன் கூட்டமைப்பு நாடாளுமன்றம் செல்கின்ற போதுதான் எம்மால் பேரம் பேச முடியும். எமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த முடியும்.

தென்னிலங்கையில் கூட்டமைப்புக்கு எதிராகவே பேசப்படுகின்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் முகவர்களாகக் களமிறக்கப்பட்டிருப்பவர்களும் அதனையே மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குகள் கூட்டமைப்பைப் பலப்படுத்தும். கூட்டமைப்பு பலம் பெற்றால் அதுவே தமிழர்களின் பலமாகவும் அமையும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் போடுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் எம்மை அழிப்பதற்கான ஆணையினை நாமே வழங்குகின்ற ஒரு துர்ப்பாக்கிய செயற்பாடாக அது அமையும் என்பதனை மறந்துவிடாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.