மோப்ப நாயின் உதவியுடன் திருட்டுச் சந்தேக நபர் கைது

download 5 4
download 5 4

வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து திருடினார் எனும் சந்தேகத்தில், திருட்டு சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் காவல்துறையினா் ஒருவரை கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை   காவல்துறைப்      பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 6 பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது. அது தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்ட  காவல்துறையினா் மோப்ப நாயின் உதவியுடன்,  12 மணி நேரத்துக்குள் திருட்டுச் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் தாலிக்கொடியும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனர். கிளிநொச்சி 13ஆம் கட்டையைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்

“அராலி கிழக்கில் வீடொன்றில் நேற்று அதிகாலை 6 தங்கப் பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்தது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் அண்மையில் உள்ள உறவினர் வீடொன்றில் இரவு தங்கியுள்ளனர். காலை வீடு திரும்பிய போது, வீட்டின் கூரை பிரித்துக் காணப்பட்டுள்ளது. வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடியும் திருட்டுப் போயிருந்தமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து வட்டுக்கோட்டை   காவல் நிலையத்தில் வீட்டின் குடும்பப்பெண் முறைப்பாடு வழங்கினார்.அவரது முறைப்பாட்டின் படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வீட்டின் கூரைப்பகுதியில் திருட்டில் ஈடுபட்டவரின் சேட் துணி ஒரு துண்டு மற்றும் சில தடயங்கள் கிடைத்தன. அவற்றின் அடிப்படையில் மோப்பநாயின் உதவியுடன் அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார் அவரிடமிருந்து திருடப்பட்ட நகையும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.