மன்னாரில் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நிறைவு

unnamed 4 5
unnamed 4 5

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை 76 வாக்களிப்பு நிலையங்களிலும் 15 வாக்கு எண்ணும் நிலையங்களிலும் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் நடைபெற இருப்பதுடன், இந்த முறை வாக்கு எண்ணும் நிலையமாக புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜெனிற்றன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளும் அதேநேரத்தில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மன்னாரை பொறுத்தவரையில் 88 ஆயிரத்த 842 வாக்காளர்களும் இதில், 5 ஆயிரத்து 807 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திலே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய இருக்கின்றார்கள். அவர்களுக்கான வசதிகள் புத்தளம் மாவட்டத்திலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 405 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலிலே 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். மன்னார் மாவட்டதை பொறுத்த வரையில் இதுவரை 45 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளது. இந்த 45 முறைபாடுகளின் அடிப்படையிலே இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் 6 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் கூடுதலான முறைப்பாடுகள் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் வேட்பாளர்கள் இல்லாத வாகனங்களில் ஸ்ரிக்கர் ஒட்டுதல் போன்ற செயற்படுகளில் பலர் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.