இலங்கை, இந்தியா, ஈரான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் குவைத் இன்று (வியாழக்கிழமை)அதிகாலை அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், நேபாளம் ஆகிய நாடுகளைத் தவிர, குவைத் நாட்டவர்கள் மற்றும் அந்நாட்டில் வசிப்பவர்களுக்கு, குவைத்திலிருந்து வெளியேறவும் குவைத்துக்கு வருவதற்குமான அனுமதியை வழங்குவதற்கு அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது எனக் குவைத் அரச தொடர்பாடல் நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து வர்த்தக விமான சேவைகள் பகுதியளவில் ஆரம்பிக்கப்படும் என்று கடந்த மாதம் குவைத் அறிவித்திருந்தது. ஆயினும், கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, அந்நாட்டு விமான சேவைகள் வழமைக்குத் திரும்பும் நிலையில், மேலும் ஒரு வருட காலம் வரை, விமான நிலையத்தின் முழுச் செயற்பாட்டையும் வழமைக்குக் கொண்டு வருவதை எதிர்பார்க்க முடியாது எனவும் குவைத் அறிவித்துள்ளது.