ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து, மே மாதம் 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்த விசேட தெரிவுக்குழுவில் ஜனாதிபதி, பிரதமர், புலனாய்வு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் வழங்கியதை அடுத்து அனைத்து சாட்சிப்பதிவுகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவுக்குழு அறிவித்தது.
இதுவரை மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு அறிக்கையை நிறைவு செய்து எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.