இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இன்று 04-05-2020 இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 107வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை 14 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி 92264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை 8.30 மணிமுதல் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. இதேவேளை குறித்த பணிகளின் போது சுகாதார நடைமுறைகள் பேணப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. இதேவேளை 1745 அரச ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.