“சுபீட்சத்தின் நோக்கு விஞ்ஞாபனத்தை” நடைமுறைப்படுத்தி நாட்டை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று (செவ்வாய்கிழமை) தனது கடமைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் ஆரம்பிக்கவுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான விரும்பு வாக்கை தனதாக்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நாடு பூராகவும் ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சகல இலங்கையர்களையும் சென்றடையும் வகையில் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை வழங்கிய குருணாகல் மாவட்ட மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை தெரிவித்தார்.