“தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“எனது முந்தைய ஆட்சியின்போது வடபகுதியில் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் பெருமளவு விடயங்களை செய்தேன்.
துரதிஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் துரிதப்படுத்தவுள்ளோம்.
இனம், கலாசாரப் பின்னணிகளைக் கடந்து எங்கள் அரசு அனைத்துப் பிரஜைகளினதும் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
வாழ்வாதாரம், விவசாயத்துக்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல், கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பில் அவசர முன்னுரிமைகள் உள்ளன” – என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது குறித்து அவர் அந்தப் பேட்டியில் எதனையும் குறிப்பிடவில்லை.