குருநாகல் நகர மத்தியில் அமைந்திருந்த இரண்டாவது புவனேகபாகு மன்னர் பயன்படுத்தியதாக கருதப்படுகின்ற அரசவை கட்டடம் தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கு இவர்கள் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 6 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட அத்தியட்சகரின் தலைமையில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களின் தொலைபேசி கலந்துரையாடல் ஊடாக, அவர்கள் தங்கியுள்ள இடங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண, நகர ஆணையாளர் பிரதீப் நிஷாந்த திலகரட்ண, நகரசபை பொறியியலாளர் ஷமிந்த பண்டார அதிகாரி உட்பட ஐவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது.