ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசின் அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, புத்த சாசனம், மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
சமல் ராஜபக்ஷ நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும், உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ முதல் தடவையாக அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சஷீந்திர ராஜபக்ஷ நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்ப விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.