7 பேர் மீது இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்!

1555910136 force 2
1555910136 force 2

சடலம் ஒன்றை தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட போது பட்டாசு கொளுத்தியவர்கள் மீது மன்னாரில் இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் தகனக் கிரிகைகளுக்காக பொது மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது , பள்ளமடு சந்தியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிக் கிரிகைகளுக்காக சடலம் அவரது இல்லத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு விடத்தல் தீவு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது பட்டாசு கொளுத்தப்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன் போது பள்ளமடு சந்தியூடாக சடலம் கொண்டு செல்லப்பட்ட போது பட்டாசு கொளுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பள்ள மடு சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டனர்.

மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 7 பேர் மீது இராணுவத்தினர் துப்பாக்கியினால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதன் போது 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கடமையில் இருந்த இராணுவத்தினரின் குறித்த நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.