வீட்டில் இருந்து நல்லூர் முருகனைத் தரிசியுங்கள்! – யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள்

unnamed 3 6

“நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர் உற்சவத்துக்குப் பெருமளவில் மக்கள்  வருவதைத் தவிர்த்து வீட்டில் இருந்து முருகக் கடவுளைத் தரிசியுங்கள்.” என்று யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவம்  தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் முகமாக, ஊடங்களுக்குக்  கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணி  வழிபாட்டை மேற்கொள்வதற்கான  ஏற்பாடுகள் பொலிஸார்,  இராணுவத்தினர் அதேபோல் சுகாதாரப் பிரிவினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் சுகாதாரப் பிரிவினரால் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதனைப் பின்பற்றி தமது வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றார்கள்.

எனினும், அண்மைய நாட்களில் கோயிலுக்கு வரும் அடியவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகக்  காணப்படுகின்றது.  மக்கள் இது தொடர்பில் சற்றுத் தெளிவாக இருக்க வேண்டும்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று சற்று தணிந்து காணப்படுகின்றது. எனினும், சமூகத் தொற்று  தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

உதாரணமாக, அண்மைய நாட்களில் இராஜாங்கனைப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று  இனங்காணப்பட்ட  விடயம் தொடர்பில் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் கொரோனாத் தொற்று ஏற்படா வண்ணம் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சுகாதாரப் பிரிவினரின் முயற்சியால்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம்.  மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அதனைச் செயற்படுத்தியுள்ளோம்.

எனினும், நல்லூர் ஆலயத்தைப் பொறுத்தவரையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருந்தும் பொதுமக்கள் ஆலயத் தேர் உற்சவத்தில் கலந்துகொள்வது வழமை. நாட்டில் கொரோனாத் தொற்று அச்ச நிலைமை காணப்படுவதன் காரணமாக, இம்முறை அவ்வாறு  இடம்பெற அனுமதிக்க முடியாது.

இம்முறை நல்லூர் ஆலய உற்சவத்தின் தேர் உற்சவம் இன்று இடம்பெறவுள்ளது. இந்தமுறை கோயில் தேர் உற்சவத்துக்கு மக்கள் அதிகளவில் வருவதைத் தவிர்த்து  சமூகத்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நல்லூர் ஆலயத் தேர் உற்சவத்துக்கு அதிகளவில் வருகை தராது வீடுகளிலிருந்து தரிசியுங்கள். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லதாக அமையும்” – என்றார்.