19ஐ முழுமையாக இல்லாதொழிக்க ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு

download 2

“அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு ஆதரவு வழங்கமாட்டோம். தடைகளை நீக்கி, முன்நோக்கி பயணிப்பதற்குத் தடங்கலாக உள்ள விடயங்களைத் திருத்துவதற்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றன. ஆனாலும், அதில் சிற்சில குறைபாடுகள் இருக்கின்றன எனப் பரவலாகக் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவை தொடர்பில் கலந்துரையாடி சாதகமான முறையில் 19ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு நாம் தயார். ஆனால், அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் பிரதான நோக்கங்களை மாற்றியமைப்பதற்கு முயற்சித்தால் அதற்கு ஆதரவு வழங்கமாட்டோம்.

நிறைவேற்று, சட்டவாக்கத் துறைகளுக்குப் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களில் மாற்றம், வெளிநாட்டு பிரஜையொருவருக்கு இந்நாட்டு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கல் போன்ற திருத்தங்கள் இடம்பெற்றால் அவற்றுடன் உடன்பட முடியாது.

அதேபோல் ஜனாதிபதியின் பதவிக் காலம், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் என்பன 5 வருடங்களாக இருக்கவேண்டும். ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என்ற தற்போதைய நிலையும் மாறக்கூடாது. அரசமைப்பு பேரவை, சுயாதீன ஆணைக்குழு, தகவல் அறியும் உரிமை ஆகியன 19 இன் பிரகாரமே தொடரவேண்டும்.

எனவே, இவற்றை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்கமுடியாது. எதிர்மறையான திருத்தங்களுக்கு நாம் எதிர்ப்பு. ஆனால், நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கு நடைமுறை சிக்கலாக உள்ள காரணிகளைத் திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்” – என்றார்.