திஸ்ஸமாஹராம – கிரிந்த பகுதியில் பேஸ்புக் (முகப்புத்தகம்) நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துக் கொண்ட 10 யுவதிகள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்கிழமை இரவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கிரிந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்போது இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறுபேரும் , கொழும்பு பகுதியைச் சேர்ந்த யுவதிகள் 10 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகபுத்தகத்தின் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த களியாட்ட நிகழ்வு , கிரிந்த பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. இதன்போது பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்திருந்ததுடன் , அவர்களிடமிருந்து கஞ்சா போதைப் பொருள் உள்ளிட்ட போதைப் பொருட்களையும் , சுங்கவரி செலுத்தப்படாத சிகரட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களை நேற்று புதன்கிழமை திஸ்ஸமாஹராம நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலை படுத்தியுள்ளதுடன் , அவர்கள் அனைவரையும் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.