அநாதரவாக்கப்படும் சிசுக்களுக்கான புதிய திட்டமொன்று அறிமுகம்

download 3 5
download 3 5

பல காரணங்கள் காரணமாக புதிதாக பிரசவித்த அல்லது ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளை பெற்றோர் வெளியிடங்களில் கைவிட்டு செல்வதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இவ்வகையில் கைவிடப்படும் பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு 9 மாகாணங்களில் உள்ள பிரதான 9 வைத்தியசாலைகளில் நிலையங்களை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை விரைவாக விசாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தாமதமின்றி கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை புதுப்பிக்கவும் முகாமைத்துவம் செய்யவும் டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.