நிறைவடைந்துள்ள புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை நிர்மாண பணி!

best of all cities
best of all cities

கொழும்பு வடக்கு பகுதியில் புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை நிர்மாண பணி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ் நிறைவடைந்துள்ளது.

நீண்டகாலமாக நிலவிய வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்த நிரந்தர தீர்வாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு பெருநகரை அண்மித்த நகர அபிவிருத்தி திட்டமாக இதனை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் செயற்படுத்தியுள்ளது.

அலுத் மாவத்தை பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட்டு ஆரம்பமாகும் இந்த சுரங்கப்பாதை புதிய முகத்துவாரம் பகுதி ஊடாக நிலத்தடி வழியாக சென்று முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கடலுக்கு திறக்கப்படுகிறது.

இன்று நிறைவுசெய்யப்பட்ட சுரங்கப்பாதையின் நீளம் 778 மீட்டராகும். 3 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கப்பாதையின் உள்ளே ஒரு திடமான கொங்கிரீட் புறணி அமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நிறைவில் ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை என்ற வகையில் வினாடிக்கு 15,000 லீட்டர் நீர் கடலுக்குள் விடப்படும். புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை கட்டுமானம் சைனா பெட்ரோலியம் பைப்லைன் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட் மேற்கொண்டது. கட்டுமான மேற்பார்வை யூஷிங் என்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.