பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன், தேர்தல் பற்றிய எவ்விதப் பேச்சுவார்த்தைகளையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என, ஈழவர் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்னம் இராஜேந்திரா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை, கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
குறித்தக் கலந்துரையாடல் தொடர்பாக நேற்று (Oct.22) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கலாசாரம் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றிய தமது எதிர்பார்ப்புகளை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளரின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்ததுடன், அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஈரோஸ் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இறுதி முடிவை விரைவில் வெளியிடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.