ஏகாதிபத்திய ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை;பொன்சேகா இடித்துரைப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 27
625.500.560.350.160.300.053.800.900.160.90 27

“புதிய அரசமைப்பின் மூலம் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுக்க அரசு முயற்சிக்குமாயின் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அரசியல்வாதிகள் ஊழல், மோசடிக்காரர்களாயின் எவ்வித அரசமைப்பு உருவாக்கப்பட்டாலும் அது பயனற்றதாகும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக நீக்கப் போவதில்லை என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் நீக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் உள்ளிட்ட சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தனிப்பட்ட தேவைக்காகவே இவ்வாறான மாற்றங்களை முன்னெடுக்கின்றனர். 19ஆவது அரசமைப்பு திருத்தத்தில் சில சில குறைபாடுகள் காணப்பட்டன. அவை நாட்டின் எதிர்காலத்தில் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலான குறைபாடுகள் அல்ல. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சில விடயங்களில் குறைபாடுகள் காணப்பட்டன. அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வார்களாயின் அதற்கு நாமும் ஆதரவளிப்போம்.

ஆனால், தனியொரு பிரிவினருக்காக மாத்திரம் புதிய அரசமைப்பை உருவாக்க முயற்சிப்பார்களாயின் அதற்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை. புதிய அரசமைப்பின் மூலம் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுக்க முயன்றால் அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்.

உலகில் அரசமைப்பு அற்ற நாடுகளும் உள்ளன. இங்கிலாந்து அரசமைப்பற்ற நாடாகும். அந்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் தூய்மையானவர்கள் என்பதாலும், அவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் என்பதாலும் அரசமைப்பின்றியே ஒழுக்கமான முறையில் அந்நாடுகள் முன்னோக்கிச் செல்கின்றன. எனவே, அரசமைப்பு இங்கு பிரச்சினையல்ல. அரசியல்வாதிகள் ஊழல், மோசடிக்காரர்களாயின் எவ்வித அரசமைப்பு உருவாக்கப்பட்டாலும் அது பயனற்றதாகும்” – என்றார்.