சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

Iranaimadhu 19
Iranaimadhu 19

இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபை முன்னிருந்து ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்று அங்கு அரசாங்க அதிபரிற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றுப்படுக்கையில் மிக மோசமான முறையில் மண்ணகழ்வு இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் செருக்கன் பகுதியில் அமைக்கப்படும் உப்பளத்தின் பணிகளை நிறுத்தி செய்கை நிலங்களை பாதுகாத்து தருமாறும் குறி்த்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளரும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான எம்.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்

இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றுப்படுக்கையில் மிக மோசமான முறையில் மண்ணகழ்வு இடம்பெற்ற வருகின்றது. குறித்த மண்ணகழ்வை தடுக்காதுவிடின் இரணைமடு குளத்திற்கு பாரிய ஆபத்து காணப்படுகின்றது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண்ணகழ்வினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் தொட்டே குறித்த பகுதியில் மண்ணகழ்வு ஆரம்பித்துவிட்டது. அக்காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் இருந்தார். அப்போது கட்டுப்படுத்த முடியாது போன மண்ணகழ்வை இப்போது உள்ள அரசாங்கம் கட்டுப்படுத்தும் என நம்புகின்றீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியபோது, 

குறித்த காலப்பகுதியில் மண்ணகழ்வை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் பொலிசாரின் கவன குறைவும், அவர்களின் செயற்பாடுமே கட்டுப்படுத்த முடியாது போனமைக்கான காரணமாகும். தற்போது உள்ள அதிகாரிகள் மற்றும் அரச தலைவர்கள் இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்துவதால் இக்காலகட்டத்தில் இதனை கட்டுப்படுத்த முடியும் என நம்புகின்றோம் என்றும் கூறியுள்ளோம்

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவத்தினரின் உதவியுடன் மணல் அகழ்வை கட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார். ஆனால் நாட்டில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு காணப்படுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

இரணைமடு குளத்தை பாதுகாக்க படையினரை பயன்படுத்துவது பொருத்தமானது என கருதுகின்றீர்களா என அவரிடம் வினவியபோது,இரணைமடு குளத்தினை முழுமையாக ஆக்கிரமிக்கவோ அதனை பாதுகாக்கவோ நாம் கேட்கவில்லை. இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண் அகழ்வை பாதுகாக்கவே நாம் கேட்கின்றோம். இவ்வாறான நிலையில் படையினர் தலையிட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை நாம் வரவேற்பதாகவும்  அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Iranaimadhu 10
Iranaimadhu 9
Iranaimadhu 13
Iranaimadhu 17