கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீட தேரர்கள் நால்வர் நியமனம்

watermark

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் நால்வரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

தமிழ் மக்களால் இந்தச் செயலணிக்கு கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டும் தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்த போதும் அவை கவனத்தில் எடுக்கப்படாமல் பௌத்த பீடாதிகள் உட்பட மேலும் நான்கு தேரர் இந்தச் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

பௌத்த ஆலோசனை சபையின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயலணி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இந்தச் செயலணிக்கு அஸ்கிரி பீடத்தின் அதிவணக்கத்துக்குரிய வெண்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி வணக்கத்துக்குரிய பஹமுணே சுமங்கல நாயக்க தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் கலாநிதி வணக்கத்துக்குரிய மெதகம தம்மானந்த நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் நிருவாகசபை உறுப்பினர் கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகிய நான்கு பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதி சிறப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களின் கலாச்சார மதிப்பைப் பாதுகாப்பதற்கும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இலங்கையின் தனித்துவத்தை ஊக்குவிப்பதற்கும், அத்தகைய மரபுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை செய்வதற்கும் இந்த பணிக்குழு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.