கத்தாழை வளர்ப்பை ஊக்குவிக்க ஆரம்ப கட்ட நிகழ்வு!

a 17
a 17

கிழக்கு மாகாணத்தில் கத்தாழை வளரப்பின் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டம் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆலோசனையில் பிரதேச செயலகம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 1000 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு குறித்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஊடாக 150 பயனாளிகள் சமூர்த்தி பெறுபவர்கள் மற்றும் சமூர்த்தி பெற தகுதியானவர்கள் என்ற ரீதியில் இனங்காணப்பட்டு தெரிவு செய்யப்பட்டு இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இக்கத்தாழை உற்பத்தி தொடர்பில் முதற்கட்டமாக இப்பிரதேசத்தில் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று 31 பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் அவர்களுக்கான ஆரம்ப விளக்கவுரைகள் ஆரம்பமானது.

இதன் போது சவளக்கடை விவசாய விரிவாக்கல் பிரிவு நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினார்.

தொடர்ந்து அம்பாறை மாவட்ட குறித்த திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஆஸாத் கருத்து தெரிவிக்கையில் கத்தாழை வளரப்பின் நோக்கம் அதன் உற்பத்தி எதிர்கால திட்டம் குறித்து கூறியதுடன் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமயில் கத்தாழை கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த கத்தாழை வளர்ப்பு திட்டத்தில் ஈடுபடும் பயனாளிகள் மாதாந்தம் 25 ஆயிரம் ருபா வருமானமாக பெற முடியும் என குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம் விவசாயப் போதானாசிரியர் எம்.எஸ்.எம் ஜெனித்கான் சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஆர்.வசந்தகுமார் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.