இலங்கை நிதி அமைச்சின் கீழ் உள்ள சமூக பாதுகாப்புச் சபையின் வவுனியா மாவட்ட காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கலும் உத்தியோகத்தர் கௌரவிப்பும் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
நிதி அமைச்சின் மாவட்டரீதியில் சமூகப் பாதுகாப்பு சபையின் ஊடாக காப்புறுதி திட்டம் அமுலாக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த திட்டத்தில் அதிகளவான அடைவுமட்டத்தை பெற்ற அரச ஊழியர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை 2020 ஆண்டு பாடசாலை மட்டத்தில் காப்புறுதித் திட்டத்தில் பங்கேற்கும் 1669 மாணவர்களில் புலமைப் பரிசில் போட்டிப் பரிட்சையில் சித்தியடைந்த 11 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பணப் பரிசில்களையும் பெற்றனர். அதேவேளை அதிகூடிய புலமையுடைய மாணவர்களுக்கு 50000 ரூபா பெறுமதியான காசோலையும் வழங்கப்பட்டது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் எம் சமன் பந்துலசேன , மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , வவுனியா மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் , மற்றும் சிரேஸ்ட இணைப்பு அதிகாரி வடக்கு கிழக்கு ரி.பிரதீபன் , வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள் , திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.