இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு கருத்தரங்கு

ilancham
ilancham

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினால் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வினை நடாத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் காரியப்பர் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

உண்மையாகவே ஒரு நாடு ஊழலற்றது என்பதனை அறிந்துகொள்வதற்கு அங்குள்ள அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாடுகளில்தான் கணிப்பீடு செய்யப்படுகின்றதாக சிங்கப்பூரின் தந்தை லீ குவாங்யூ குறிப்பிட்டதாக அரசாங்கஅதிபர் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் குறிப்பிடுகையில் அதிகபடியான முறைப்பாடுகள் அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்படும் போதும், பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சார்பான முறைப்பாடுகள் அத்துடன் காணி தொடர்பான பிணக்கு, இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்பாடுகள் மற்றும் அரச தொழில் பெறுவதற்கான இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்பாடுகள் தான் அதிகமாக பதிவாகி வருகின்றது என குறிப்பிட்டார்.

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இயற்றப்பட்டு நடைமுறையிலுள்ள இலஞ்சம் ஊழல் சம்பந்தமான சட்டங்கள் இலங்கையில் முதல் முதலாக 1954 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இச் சட்டமானது காலத்திற்கு காலம் சிறு மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.