புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு அவசரப்பட தேவையில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அதனை கொண்டு வருவதற்கு ஏன் அவசரப்பட வேண்டுமென தாம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புறக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
மகா சங்கத்தினர், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் யோசனைகளை பெற்றுக் கொண்டு நாட்டுக்கு சாதகமான முறையில் இந்த அரசியல் அமைப்பு திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொள்ளப்பட்ட 69 லட்சம் வாக்காளர்களைப் போன்றே அரசாங்கத்திற்கு கிடைக்காமல் போன 62 லட்ச வாக்காளர்களையும் கவனத்திற் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்.
நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய ஏதேனும் நடவடிக்கைகள் இடம்பெற்றால் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது .