கோத்தாபய ராஜபக்ஷவின் மேடையில் அவருடைய குடும்பம் மாத்திரமே நிற்கின்றது. எனினும் எம்முடன் அனைத்து இனமதங்களைச் சார்ந்தோரும், நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களைச் சார்ந்தோரும் கைகோர்த்திருக்கின்றனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச்செய்யும் நோக்கிலான இடதுசாரிகள் ஒத்துழைப்பு மாநாடு நேற்று புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒருபுறம் பாஸிசவாதமும், மறுபுறம் ஜனநாயகமும் போட்டியிடுகின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் நிச்சயமாக சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள். அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
குடும்ப ஆட்சிக்காரர்களிடம் நாட்டைக் கையளிப்பதா அல்லது ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுவோரிடம் நாட்டைக் கையளிப்பதா என்ற தீர்மானத்தை மக்களே மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.