வவுனியா மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதியில் உப குடும்பங்களுக்கு சேர வேண்டிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியினை மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் உரிமை கோருவதாக மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரச்சனையை முன்னிறுத்தி கிராம மக்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள்,
மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் எமது பகுதியில் வந்து 20 ஏக்கர் காணியை குத்ததைக்கு எடுத்து செய்து வந்தார். தற்போது கிராமத்தில் உள்ள பொதுக்காணியினை காணியற்ற உப குடும்பங்கள் துப்புரவு செய்து வேலி அடைத்திருந்த நிலையில், அதை தனது காணி என்றும் அதற்கான பத்திரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் எங்களை அச்சுறுத்துகின்றார்.
இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு பொலிசாருடன் வந்து எம்மை அச்சுறுத்தியதுடன், காணியின் வேலியினையும் பிடுங்கி எறிந்துள்ளார்.
எமது மக்களுக்கு சேர வேண்டிய காணியினை வெளியிடத்தை சேர்ந்த ஒருவர் உரிமை கோருவதுடன், எம்மை அச்சுறுத்துவதனை எம்மால் ஏற்க முடியாது. எனவே எமக்கு உரிய தீர்வினை தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் இவ்விடயம் தொடர்பாக நாளைய தினம் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி விட்டு தீர்வினை வழங்குவதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.