வவுனியாவில் தற்போது வீசிய கடும் காற்றினால் வவுனியா நீதிமன்றத்திற்கு அருகாமையில் நின்ற பாரியமரம் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
வவுனியா வீதிஅபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக வீதியோரத்தில் நின்ற பாரிய முதிரைமரம் அடியோடு சரிந்து வீழ்ந்ததில் மின்சார கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைப்பட்டதோடு, நீர் விநியோகமும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது.
அத்தோடு அலுவலகத்தின் பெயர் பதாகை சிதைவடைந்துள்ளதுடன் அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பாதையும் தடைப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் கடும் வெப்பமான காலநிலை நிலவிவந்ததுடன் தற்போது மாலை வேளைகளில் அதிக காற்றுடனான காலநிலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்விடத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்சார இணைப்புக்களை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.