மன்னார் சோதனைச்சாவடியில் வைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து கூலர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை நேற்று புதன் கிழமை(23) இரவு மடு பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 103 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் இவ்வாறு நேற்று புதன் கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர்.

மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஸ தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த கூலர் வாகனத்தில் கஞ்சா பொதிகளுடன் சென்ற எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடைய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் வாகனம் மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மடு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் விசாரனையின் பின்னர் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.