தனக்கு ஊழல் செய்ய தெரியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தகத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி கால “மத்திய வங்கி பிணைமுறி” ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பி பிரயோஜனம் இல்லை.
ஏனெனில் நான் மனோ கணேசன். எனக்கு ஊழல் செய்ய தெரியாது. என் சொந்த நிதியில்தான் நான் மக்கள் அரசியல் பணியை கடந்த இருபது வருடங்களாக செய்கிறேன். இன்னமும் இயன்றவரை செய்வேன்.
ஆகவே, பிணைமுறி ஊழல் பற்றி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜுன மகேந்திரன், அலோசியஸ் கும்பலிடம் கேளுங்கள்.
சிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாது.
நல்லாட்சி அரசு என்பது ஒரு கூட்டணி அரசாங்கம். அதில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், வெளியில் இருந்து ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இருந்த முன்னுரிமை தேவைகள் வேறு என்பதை அறிவாளி நண்பர்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
எம்மை பொறுத்தவரை “மலையக தோட்டங்களில் 7 பேர்ச் காணி, சொந்த தனி வீடு, மலையக தமிழ் கிராமங்கள், வடகொழும்பில் சேரிபுறங்களை ஒழித்து கட்டப்பட்ட 13,000 தொடர்மாடி மனைகள், அங்கே, வெளிநபர்களை குடியேற்றாமல், அந்நிலத்து சேரிகளில் வாழ்ந்த ஏழை தமிழ், முஸ்லிம் மக்களையே குடியேற்றியமை, புதிய மலையக பிரதேச சபைகள், எமது பிரதேச சபைகள் தோட்ட புறங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் உரிமையை கபினட் தீர்மானம் மூலமாக உறுதிப்படுத்தியமை, மலையக அபிவிருத்தி அதிகார சபை, மலையக பாடசாலைகளுக்கு மேலதிக காணி” என நீண்ட சாதனை பட்டியல் உண்டு.
நாம் “பதவியேற்ற போதுவடகிழக்கில், இருந்த அரசியல் கைதிகள் தொகை சரிபாதியாக குறைந்தது, 60% க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு காணிகள் விடுவிப்பு, வீடமைப்பு, மரணித்தோரை நினைவுக்கூறும் உரிமை, கடத்தல், கொலை, கைதுகளற்ற சமாதான சூழல்” என்ற பட்டியல் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .