கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்தவர் மீது தாக்குதல்!

f63a0508f15522cdd92e2a9090280ad7
f63a0508f15522cdd92e2a9090280ad7

உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்ததொடுவா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மீது, போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி கந்ததொடுவா பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரே குறித்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை தொடர்பிலேயே 48 வயதுடைய நபர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதாக உடப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தாக்குதல் சம்வத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை கைது செய்யவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உடப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.