மட்டக்களப்பில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!

மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை (55 வயது ) என்பவரே நாவத்தை சின்னவெம்பு கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று (29) நண்பகல் கரைவலைத் தொழிலுக்குச் சென்ற வேளை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, கல்குடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கரைவலைத் தொழிலுக்கு பெரும்பாலும் குறித்த பிரதேசத்தில் உழவு இயந்திரமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரைவலையை இழுக்கும்போது, உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்ட கயிறு அறுந்து சென்ற நிலையில், அதனை மீண்டும் உழவு இயந்திரத்தில் இணைக்கும் முகமாக கடலில் இருந்து எடுக்கச்சென்ற வேளை குறித்த மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.