ஜக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது புத்தகம் ஒன்றை எழுதுவதற்கு தனது நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறித்த உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறுப்பட்டுள்ளது.
மேலும், இளம் உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் போக்கை வழிநடத்த தயாராக உள்ளனர் என்பதையும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் மட்டும் கிடைத்திருந்தது.
எனினும், தற்போது வரையிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.