யாழ்.மாவட்ட மக்கள் எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும் – சி .யமுனாநந்தா

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய்த் தொற்று தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது ‘லெப்ரொஸ்’ வைரஸ் என்பது பொதுவாக எலிக் காய்ச்சல் என அழைக்கப்படும் இது இலங்கையில் அடுத்தடுத்து 1960 ,1970களில் இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. பின்னர் நெடுநாட்களாக இந்நோய்த் தாக்கம் குறைவடைந்திருந்தது.

குறிப்பாக இந்நோயானது, வயலில் வேலை செய்பவர்களுக்கு எலிகளிலிருந்தும், அவற்றின் சிறுநீர் வயல் நீருக்குள் செல்லும் போது விவசாயிகளின் உடலில் ஏதாவது சிறு காயங்கள் இருப்பின் அதனூடாக நோய்க்கிருமி தொற்றலாம்.

இந்த சிறுநீர் கலந்த நீரில் முகத்தை கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ இந்த நோய் கிருமி தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.

இந்நோய் பொதுவாக இலங்கையில் களுத்துறை, இரத்தினபுரி, புத்தளம், சிலாபம், அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது ஓரளவு இனம் காணப்பட்டு வருகின்றது. இவ்வருடம் ஒருவர் இந்த வைரஸ் நோயால் இனங்காணப்பட்டு இறந்துள்ளார். சுமார் 30 பேருக்கு சந்தேகத்துக்குரிய இந்த கிருமி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.

இலங்கையிலும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ‘லெப்ரோஸ்’ வைரஸ் நோயினை இனங்காண்பதற்கு நோயாளிகளுக்கு காய்ச்சல், தசை நோய், கண் சிவப்பாக இருக்கும். இவர்களுக்கு சிறுநீரகம், மூளை, இதயம் போன்றவை செயலிழக்கலாம். சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைந்துசெல்லும்.

‘லெப்ரொஸ்’ வைரஸ் தொற்றை ஆரம்பத்தில் இனங்கண்டால் சிகிச்சை அளிப்பதன் மூலம் பூரணமாக குணப்படுத்த முடியும். இனங்காணப்படாவிட்டால் இறப்பு ஏற்படும்.

இந் நோய் தொற்றுக்குரிய MRI பரிசோதனை கொழும்பில் உள்ளது. இந்த பரிசோதனைக்கு எடுக்கும் காலம் இரண்டு கிழமைகளாகும்.

ஆரம்பத்திலேயே இந் நோய்தொற்றினை கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதன் மூலம் இதனை குணப்படுத்தலாம்.

எலிகளின் பரம்பல் இந்த நோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது அதேபோல் யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரைக்கும் எலிகளின் பெருக்கம் இந்நோய் பரவுவதற்கு ஒரு காரணமாக அமையும்.

குறிப்பாக: யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரை எலிகளின் பெருக்கத்திற்கு நகர மயமாக்கப்படும்போது, வீடுகள் நெருக்கமாக கட்டப்படும் போது, அங்கு உணவு பொருட்களை தீண்டுவதற்காக எலிகள் அங்கு வருகின்றன. அதேபோல் பாம்புகளின் அளவு குறையும் போதும் எலிகளின் பெருக்கம் கூடும். இது குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் அவதானிக்கவேண்டும்.

அடுத்ததாக இந்த எலிகள் உணவுப் பண்டங்களை தீண்டுவதால் நோய்க் கிருமி தொற்றலாம்: உணவு பண்டங்களில் சிறுநீர் கழிப்பதால், வீடுகளில் உள்ள நீர்த் தாங்கிகளில் எலிகள் இறக்கலாம் , அல்லது சிறுநீர் கழிக்கலாம்,

எனவே யாழ்ப்பாணத்தில் மிகவும் அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதால் இந்த நோய் பரவலை தடுக்கலாம்.

இந்நோய் எருமை மாடு, நாய் போன்றவற்றிலும் இருந்தும் தொற்று ஏற்படலாம். குறிப்பாக மிருகங்களை வளர்ப்பதற்காக ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு கொண்டுவரும்போதும் இந்நோய் தொற்று வரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றது.

நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து உணவு பொருட்களை களஞ்சியமாக வாகனங்களில் கொண்டு வரும்போதும் தொற்றும் வாய்ப்புள்ளது.

எனவே இது தொடர்பில் விழிப்புணர்வு நமக்குத் தேவை. ஏனெனில் டெங்கு நோய் A-9 பாதை மூடப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் இல்லை. ஓரிரு நோயாளிகள் இனங்காணப்பட்டார்கள். பாதை திறந்த பின்னரே டெங்கு நோய் வந்தது. அதேபோல ‘லெப்ரோஸ்’ வைரஸ் யாழ்ப்பாணத்தில் பெருகாமல் தடுப்பது மிக முக்கியம்.

குறிப்பாக: வயல்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த நோய் வராமலிருக்க எலிகளின் கட்டுப்பாடு மிக முக்கியமானது.

இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ‘லெப்ரோஸ்’ வைரஸ் நோயால் சுமார் 2000 பேர் இனங்காணப்பட்டார்கள். ஒரு லட்சம் பேர் வரை பாதிப்படைந்தார்கள். 300 பேர் வரை இறந்தார்கள். அவர்களுக்கு கிருமி வெள்ளப்பெருக்கு மூலம் ஏற்பட்டது.

நோய்க் கிருமி உள்ள நீரானது எல்லா இடத்துக்கும் போகும்போது அந்த நீரை அருந்தும்போது அந்த நோய்க்கிருமி இலகுவாக தொற்றக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன…

எனவே யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எலிக்காய்ச்சல் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.