வவுனியாவில் மூதாட்டியின் சங்கிலியை அறுத்த இருவர் கைது!

kaithu

வவுனியா, சமயபுரம் பகுதியில் மூதாட்டியின் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் இரு சகோதரர்களைப் பொலிஸார் இன்று (06) கைது செய்துள்ளனர்.

சமயபுரம் பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்த மூதாட்டியிடம் இரு இளைஞர்கள் சென்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் செயற்பட்டு மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு  தப்பிச் சென்றிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த மூதாட்டி வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். உடனே விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 20, 22 ஆகிய வயதுடைய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த மூதாட்டியின் சங்கிலியையும் பொலிஸார் மீட்டெடுத்தனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.