வடமராட்சி மக்களுக்கு சுகாதாரப் பிரிவின் அவசர அறிவித்தல்!

WhatsApp Image 2020 10 06 at 07.37.06
WhatsApp Image 2020 10 06 at 07.37.06


மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான இ.போ.ச. பஸ்ஸில் பயணித்த 50 பேர் வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எனவே, அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் உடனடியாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பிரதேசத்திலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமணைக்கோ தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தொற்றுக்குள்ளானோர் பிரதேசத்தில் காணப்படலாம் என்ற அடிப்படையில் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் அவசர தேவைகள் தவிர்ந்த தேவையற்ற விதத்தில் நடமாடுவதையும் ஒன்றுகூடுவதையும் தவிர்க்குமாறும் சுகாதார மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பாதித்த புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பஸ், புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் அதிகாலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளர்.

அந்த பஸ் அதிகாலை 5 மணிக்குப் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளது. அதில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர்.

எனவே, கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பஸ்ஸில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனர் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ்ஸில் பயணித்தோர் உடன் தன்னார்வமாக உங்களை வெளிப்படுத்தி வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.