பொதுமக்கள் தேவையற்ற பொருட் கொள்வனவை தவிர்க்கவும் – யாழ். வணிகர் கழகம் கோரிக்கை!

“யாழில் போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” எனவும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் சமூகத்தொற்றாக மாறியுள்ள நிலையில் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். இது மட்டுமன்றி சமூகத்தொற்று காரணமாக நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தினால் அத்தியாவசியப் பொருட்களை அதிகளவாக கொள்வனவு செய்கின்ற நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழலில் தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிலிருப்பில் உள்ளன.

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றன. ஆகையால் தேவையற்ற முறையில் பொருட்களை கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தவேண்டாம். அது மட்டுமன்றி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதற்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்கும் அங்குள்ள பிரதேச வர்ததகர்களுடாக பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

எனவே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். இதேவேளை, அரசினால் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களே கூடிய விலையில் விற்பனையாகின்றன. விலை ஏற்றம் வர்த்தகர்களால் ஏற்பட்டதல்ல. இறக்குமதியாளர்களால் ஏற்படுத்தப் பட்டது. அதற்கு அரசுதான் தடையை நீக்க வேண்டும் – என்றார்.