யாழ்ப்பாணத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க வட கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய மீனவர்களுடன் சுழியோடிகள் தொடர்பினை கொண்டுள்ளதால் யாழ்ப்பாண தீபகற்ப மக்களிடையே கொரோனா தொற்றுநோய் பரப்புவதற்கான ஆபத்து காணப்படுவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

முதல் கொரோனா அலையின் போது இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.

யாழ்ப்பாண தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் கடல் அட்டைகள் மற்றும் மட்டிகள் சேகரிக்க மீன்வள மற்றும் நீர்வளத்துறை சிறப்பு சுழியோடும் அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் குறித்த கடற்கரையில் தற்காலிகமாக வசித்துக்கொண்டு அவற்றில் ஈடுபடுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

”குறித்த நடவடிக்கைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள சில சுழியோடிகள் குறித்த அனுமதியை மீறி இழுவைப்படகு முலம் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களுடன் சட்ட விரோதக் கடத்தல்களில் ஈடுபடுவதாக் தெரியவந்துள்ளது.”

இதன் காரணமாக, யாழ்ப்பாண தீபகற்ப மக்கள் மத்தியில் கொரோனா தொற்றுநோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

அதற்கமைய கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக தடை செய்வதற்கு கடற்றொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.