கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவே பொது மக்கள் அச்சம் கொண்டு அத்தியாவசிய உணவு பொருட்களை தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலடைந்ததை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஏனைய பிரதேசங்களில் மக்கள் அன்றாட கொள்வனவுக்கு மாறாக அத்தியாவசிய உணவு பொருட்களை கொள்வனவு செய்கின்றமை காண முடிகிறது.
நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய தேவை ஏதும் இதுவரையில் எழவில்லை. அரசாங்கமும் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை எனவே கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணும் பிரதேசங்கள் மாத்திரமே தற்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
நாடு முழுமையாக முடக்கப்படும் என பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தற்போது ஊரடங்குசட்டம் பிறப்பித்துள்ள பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை பிரதேச செயலக பிரிவு ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், அனைத்து நகரங்களும் கிருமி தொற்று நீக்கி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். ஆகவே பொது மக்களும் தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிக்கிடத்தக்கது.