போலி காணி உறுதிப் பத்திரங்களை தயாரித்து தலை மன்னார் பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவை கொண்ட இரண்டு காணி துண்டுகளை சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் மொஹமட் ரிஃப்கான் பதியுதீன் உட்பட இரண்டு பேருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக ஏனைய சந்தேக நபர்கள் இருப்பின் அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மீஹார் இன்று (08) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனு இன்று நகர்த்தல் பத்திரம் ஒன்றில் ஊடாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை மன்றில் முன்வைத்த சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன அவர்களை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பூர்வாங்க உத்தரவை கடந்த பெப்ரவரியில் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளுக்கு பிறப்பித்திருந்தாலும் அந்த உத்தரவு இதுவரை செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்ததுடன் வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.