கொரோனா சிகிச்சைக்காக கிழக்கு மாகாணத்தில் 4 வைத்தியசாலைகள்

Hospital
Hospital

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு சுகாதார அமைச்சு மாவட்டம் தோறும் ஒவ்வொரு வைத்தியசாலைகளை பயன்படுத்துவதற்கான திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் 4 வைத்தியசாலைகளை கொரோனா தொற்றுக்கான சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்து பணிப்புரை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் இன்று (10) தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை காரணமாக தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்தற்கான வைத்தியசாலை மேலும் தேவைப்படுகின்றது. இதற்கமைய நாட்டில் உள்ள சகல மாவட்டங்களிலும் மேலும் வைத்தியசாலைகளை கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவுசெய்து வைத்தியசாலைகளை தெரிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகளை மாற்றுவதற்கு அமைச்சு தெரிவு செய்து பணிப்புரை வழங்கியுள்ளது.

அதேவேளை நாட்டில் மேலும் கொரோனா தொற்று அதிகரித்தால் மேலும் வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்ற சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.